கொல்லிமலையில் நான்கு நாட்களாக அலைய வைத்து ஆதார் அட்டை திருத்த படிவத்தை கிழித்து தூக்கி எறிந்த வட்டாட்சியர் அலுவலக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர், ஆதாரில் தனது பெயர் தவறாக உள்ளது என்பதால் அதை திருத்துவதற்கான படிவத்தை கணினி பிரிவில் இருந்த அலுவலரிடம் கொடுத்துள்ளார். அப்போது, இது சரியில்லை எனக் கூறி படிவத்தை கண் முன்னால் கிழித்து தூக்கி எறிந்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு (ஊராட்சி) பகுதியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்ற விவசாயி. இவருடைய மனைவி குமாரி என்பவரின் பெயர் ஆதார் அட்டையில் தவறாக உள்ளது. இதனால், அதை திருத்தி பெயர் மாற்றம் செய்து தருவதற்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி மையத்தை அணுகி உள்ளார்.




ஆதார் திருத்துவதற்கான படிவத்தில், தான் அரியூர் நாடு பகுதியில் வசிப்பதற்கான அத்தாட்சியை அரியூர்நாடு ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கத்திடம் ஒப்புதல் பெற்று கையெழுத்து வாங்கி சென்றுள்ளார்.


ஆதார் படிவத்தைப் பெற்ற கணினி அலுவலர், படிவத்தில் கையெழுத்து சரியில்லை எனக் கூறி திருப்பிக் கொடுக்காமல் விவசாயி கண்முன்னே கிழித்து தூக்கி எறிந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி, அரியூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவருக்கு இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.


இதுதொடர்பாக விவசாயி கூறுகையில், “தன் படிவம் சரியில்லை என்றால் என்னிடம் திருப்பிக் கொடுக்கலாம் அல்லது திருத்திக் கொண்டு வாருங்கள் என கூறியிருக்கலாம். ஆனால், அலுவலர் தன்னிச்சையாக என் கண் முன்னே கிழித்து வீசியது வேதனை அளிக்கிறது. இவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நான்கு நாட்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலையவிடுகின்றனர். இந்நிலையில் படிவத்தை கிழித்து எறிந்ததால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலரின் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




இதுகுறித்து அரியூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர் நாகலிங்கம் கூறுகையில், “நான் கையெழுத்திட்ட படிவம் தவறாக உள்ளது என்றால் போன் செய்து என்னிடம் கூறலாம் அல்லது வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விவரம் கேட்கலாம். இது எதையுமே செய்யாமல் தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர் விவசாயிகள் கொண்டு வரும் ஆதார் திருத்த படிவம், மாணவ, மாணவிகள் கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை கிடப்பில் போடுவது வேதனைக்குரிய செயலாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் தமிழக முதல்வரும் இதை கவனத்தில் கொண்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.