அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை


 




அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின் ஆட்சிப் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள, அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம் மற்றும் உப நதிகளான சண்முகா நதி, குதிரை ஆறு, உப்பாறு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


 




 


கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும்போது உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில், காவிரியாற்றில் கலந்து வீணாக கடலுக்குச் செல்கிறது. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். கிளை வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதி  விவசாயிகள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது குடிநீருக்கும், கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் கிடைக்காத நிலையில் உள்ளது. வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர், கால்நடைகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.


இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப் பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும் போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம். பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு, அமராவதி ஆற்றின் குறுக்கே பெரிய ஆண்டாங்கோவிலில் தடுப்பணை கட்டியுள்ளனர். அதேபோல், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும்.  இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 




 


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.


மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு, 9,761 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணிக்கு வினாடிக்கு, 9,737 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குருவை சாகுபடிக்காக காவிரியாற்றில் 9.337கன அடியும் தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை  வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அமராவதி அணையில்  இருந்து, காலை வினாடிக்கு, 175 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வினாடிக்கு காலை 340 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடிகொண்ட அணையின் நீர்மட்டம் 46.79 அடியாக இருந்தது. கார்வாழிஆத்துப்பாளையம் அணைக்கு காலை தண்ணீர் வரத்து இல்லை.  26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம்,  10.40 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில்,  நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.