கவின்மிகு கரூர் திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க தூய்மை காவலர்களுக்கு மின்கல வண்டி இயக்குவதற்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


 




 


கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில்  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் என்ற திட்டத்தில், அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தும் மின்கல வாகனத்தை இயக்குவதற்கு,  தூய்மை காவலர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டதை பார்வையிட்டு தூய்மை காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,


 




கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் முன்மாதிரி ஊராட்சியாக  வெள்ளியணை ஊராட்சியை மாற்றுவதற்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் என்ற திட்டம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக தூய்மை காவலர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் மின்கல வாகனத்தை இயக்குவதற்கான பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்த தூய்மை காவலர்களாகிய நீங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனைத்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிப்பதன் மூலம் பொதுமக்களின் மனநிலையும் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும் ஆகையால் குப்பைகளை சரியான நேரத்தில் குப்பைகளை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இந்தப் பணியை கடமை என்று கருதாமல் உங்களுக்காவும் உங்கள் ஊருக்காகவும் பணிகளை  மேற்கொள்ள வேண்டும்.


தூய்மையான ஊராட்சி மாற்றுவதற்கான வழி உருவாகும். குப்பைகளை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என சேகரிக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தருவது மூலம் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அரைத்து சாலைகள் அமைப்பதற்தாகவும், பிளாஸ்டிக் பாட்டில்களை நூல்களாக்கி துணி நெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  ஆகவே பொதுமக்கள் தூய்மை காவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் இல்லாத கிராமங்களை உருவாக்கி தூய்மையான நகரத்தை நம்மால் கொண்டு வர முடியும். வீடுகளில் உள்ள கழிவுநீரினை முறையாக கழிவுநீர் வாய்க்கால்களில் விட வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை அறவே நிறுத்த வேண்டும். கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும். அதோடு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களும் அமைத்துக் கொடுக்கப்படும்.


 




இந்தத் தூய்மை பணியை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களுக்கு சீருடை, காலணி, வீட்டுமனை பட்டா, நலவாரியத்தில் உறுப்பினர்கள் அட்டை, மேலும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் ஆகவே தூய்மை காவலர்களாகிய நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு முறையாக வாகன பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். வெள்ளியணை ஊராட்சியை கரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியான ஊராட்சியாக உருவாக்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என  தெரிவித்தார்.