கோடநாடு கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென ஒபிஎஸ் தமிநாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.


கோடநாடு கொலை வழக்கு:


இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ், “ கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசின் கடமையாகும். அதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். தீவிர விசாரணையில் இந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் யார் என்பது தெரிய வரும். கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டார்.


மேலும், 4 ஆண்டுகள் அட்சியில் இருந்த போது இந்த விவகாரத்தை வலியுறுத்தாது ஏன் என்ற கேள்விக்கு, ” துணை முதலமைச்சருக்கு அரசில் எந்தவித அதிகாரமும் கிடையாது, நான் பதவி வகித்த போதும் எந்த அதிகாரமும் எனக்கு இல்லை. எங்களுக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்காத நிலையில், அரசை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இரட்டை இலை சம்மதமாக வழக்கு விசாரணையில் உள்ளது. எதிர்கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் இருந்த போது ஆட்சிக்கு வந்தால், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தார்.


ஆட்சி வந்து இரண்டரை ஆண்டு ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் தான் தற்போது வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார். 18 ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு இன்னும் வரவில்லை என்றும்,  கட்சியை விட்டு நீக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் குறிப்பிட்டார்.


குற்றவாளிகள்:


செய்தியாளர் சந்திப்பில் பேசிய பன்ருட்டி ராமசந்திரன், “குற்றங்கள் நடந்தால், குற்றவாளியை கண்டுபிடிப்பது அரசின் கடமை. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது சட்டம் ஒழுங்கு அவருக்கு கீழ் இருந்தது. இந்த வழக்கை விசாரிப்பது அவரது கடமை. யார் குற்றவாளிகளை காப்பாற்றினார்கள் என்பதையும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.


ஓ.பி. ரவிந்திரநாத் தகுதி நீக்கம் தொடர்பாக பேசிய பன்ருட்டி ராமசந்திரன், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். இதில் இரண்டு விஷயம் நடந்துள்ளது. ஒன்று வேட்பமனுவில் முழு விவரம் இல்லை,  இரண்டாவது வேட்பமனுவை நிராகரிப்பது பதிலாக அதனை ஏற்றுள்ளார் தேர்தல் அதிகாரி. இது தான் நடந்துள்ளது. இதற்கு மேல் முறையீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.