நமது கிராம ஊராட்சிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள கிராம ஊராட்சி தலைவர் உறுதி ஏற்க வேண்டும் என கிராம ஊராட்சி தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பேசினார்.


கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் மணவாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்களுக்கான நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


 




 


 


இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,


கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சி தலைவர்களையும் ஒரே இடத்தில் சந்தித்து உங்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற வளர்ச்சிக்காகவும் உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பாக கட்டமைப்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கிராம ஊராட்சி தலைவர்கள் மற்ற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை விட நிதிகளை கையாளும் அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது.  அது மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடு இன்றி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் அமைப்பு சாராத தேர்தல் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்.நமது கிராமத்தை குப்பைகள் இல்லாத சுத்தமான கிராமமாக வைத்துக்கொள்ள உறுதி எடுக்க வேண்டும்.  வீடுகளுக்கே சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து முறையாக சுத்தம் செய்ய இன்று முதல் நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தின் காடுகள் கூட சுத்தமாக இருக்கும் அப்படி இருக்கும் பொழுது நமது மக்கள் வசிக்கும் ஊராட்சி பகுதிகளை நாம் முழுமையாக சுத்தமாக வைத்துக் கொள்ள  இன்று  முதல் உறுதி ஏற்போம். 


 


 




 


அடுத்ததாக ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை எடுக்கும் போது எது அவசியம் தேவை என்பதை அறிந்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று யோசித்து நிதிகளை சரியாக கையாண்டு  எடுக்கும் பணிகளை உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்லுவது போல் ஓட்டு போட்டவர்கள் பாராட்ட வேண்டும் ஓட்டு போடாதவர்கள் ஏன் ஓட்டு போடவில்லை என்று வருத்தப்பட வேண்டும் என்கின்ற அளவிற்கு பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் பெண் ஊராட்சி தலைவர்கள் தாங்களாகவே செயல்பட முன்வர வேண்டும். சமையல் செய்கிறோம், குழந்தைகளை வளர்க்கிறோம், வீட்டை நிர்வாகம் செய்கிறோம் அப்படி இருக்கும்போது ஒரு கிராமத்தை நம்மால் நிர்வகிக்க முடியும் என்று உறுதி ஏற்று இன்று முதல் நீங்கள் தன்னிச்சையாகவே செயல்பட முன்வர வேண்டும்.  உங்கள் பணிகளை பாராட்டி வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.


 




இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், (உதவி இயக்குநர் ஊராட்சி) அன்புமணி, மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.