கரூர் மாயனூர் கதவணையில் இருந்து, சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பகுதி அகண்ட காவிரி, கடல்போல் காட்சியளிக்கிறது.


 





சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, நேற்று இரவு, 92 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில், காவிரி ஆறு செல்லும் நீர்வழிப்பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


 




அது படிப்படியாக அதிகரித்து, நேற்று மாலை முதல், ஜேடர்பாளையம் அணையிலிருந்து, 40 ஆயிரம் கனஅடி நீர், மாயனூர் கதவணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மாயனூர் கதவணையிலிருந்து காவிரி ஆற்றில், சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது மேட்டூர் அணையில் இருந்து வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீஸ், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


 




கரையோர பகுதிகளில், ஊராட்சிகள் மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், விழிப்புணர்வு பதாகைகள், பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக, தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. ஆற்றங்கரையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.