கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. திறந்தவெளியில் தண்ணீர் தேக்கி வைக்கும் நபர்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மேயர் கவிதா கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 




தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


 




அதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கொங்கு நகர் பகுதியில் அமைந்துள்ள காய்கறி சந்தை, குடியிருப்பு பகுதிகளில்  மேயர் கவிதா கணேசன் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், திறந்தவெளியில் தண்ணீர் இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகளில் லார்வா கொசு புழுக்கள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்தனர்.


 




 


தண்ணீர் தொட்டிகளில் மருந்து ஊற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மேயர் கவிதா கணேசன், கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் டெங்கு ஒழிப்பு பணிக்காக 300 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திறந்தவெளிகளில் தண்ணீரை தேக்கி வைத்து, லார்வா கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தொடர்ந்து செயல்படும் குடியிருப்புவாசிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் கரூர் மாநகராட்சி பகுயில் இதுவரை ஒருவருக்கு கூட டெங்கு காய்ச்சல் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.