கரூரில் பள்ளி மாணவர்களுக்குள் பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டியை ஊருக்குள் புகுந்து தாக்கிய விவகாரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


 




நாங்குநேரி சம்பவத்தை போல் கரூரில் இரு சமுதாய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஜீவா (14) என்பவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவருக்கும் புலியூர் அரசு உதவி பெரும் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கும் பேருந்தில் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், அடுத்த நாள் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜீவா ஊருக்குள் சென்று மாணவர் மற்றும் அவரது பாட்டி காளியம்மாள் ஆகிய இருவரையும் கும்பலாக சென்று தாக்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 





 


 


காயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது பாட்டி இருவரும் சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இளங்கோ (19), மணிகண்டன் (19) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள், விஜய் (17), கனகராஜ் (14) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் என 4 மாணவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னையும் தனது பாட்டியை தாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று பள்ளி மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.