கரூர் மாவட்டத்தின் சிறப்பு திட்டமான போட்டி தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திட்ட பயிற்சியின் மூலம், கரூர் மாவட்டத்தில் 48 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 2 போட்டித் தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பெருமிதம் தெரிவித்தார்.




 


கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று பொது நூலகத்துறை, மாவட்ட நிர்வாகம் – கலங்கரை விளக்கம் திட்டம், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நடத்தும் 55-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குடிமைப்பணி போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேரனும் சென்னை காமராஜ் ஐ.ஏ.எஸ் அகாடமி கௌரவ இயக்குனர் காமராஜ் முன்னிலை வகித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:


இந்திய குடிமை பணி மற்றும் போட்டி தேர்வுகளை மாணவ, மாணவியர்கள் எவ்வாறு அனுகுவது குறித்து ஏன், எப்படி, எதற்காக, எதனால் என அறிந்து செயல்பட வேண்டும். முக்கியமான 11 போட்டித் தேர்வுகள் இருக்கிறது. 
குடிமைப்பணி தேர்வு முதன்மையானது. இத்தேர்வானது கடினமான தேர்வு ஒன்று மில்லை, நாம் எவ்வாறு தேர்வு எழுதலாம் அதற்கு எதையெல்லாம் படிக்கலாம் எப்படி படிக்க வேண்டும் என்பதை புரிந்து படியுங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் எந்த ஒரு தேர்வு எழுதுகிறீர்களோ அந்த தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆண்டுக்கு ஆண்டு தேர்வு முறைகள் மாறிக்கொண்டே வருகிறது. முயற்சியும், பயிற்சியும் பெற்று விரும்பி படித்தால் நினைத்த இலக்கை அடையலாம். முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான் இந்த போட்டி தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. இளநிலை பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இத்தேர்வுகளை எழுதலாம்.


மாவட்டத்தின் சிறப்பு திட்டமான போட்டி தேர்வர்களுக்கு உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திட்ட பயிற்சியின் மூலம் கரூர் மாவட்டத்தில் 48 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி-2 போட்டித் தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். நாம் படிக்கும் பொழுது சுய மதிப்பீடு, சுற்று சுழல் அறிதல், இலக்கு நிர்ணயித்து பயணம், இலக்கினை அடைந்து சிறப்பாக செயல்படுதல், பிறருக்கு வழிகாட்டுதல் போன்றவை வெற்றிக்கான படிகளாகும். மேலும், அரசியல் சாசன அமைப்புகள், பூகோள அமைப்புகள், பொது அறிவு, நடப்பு செய்தித்தாள் போன்றவற்றை நன்கு தெரிந்து வைத்தால் இத்தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என காணொலி காட்சி வாயிலாக விளக்கினார். 




முன்னதாக தமிழ்நாடு அரசு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு இருந்த போதும் கரூர் மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு குடிமைப் பணி தேர்வுகளை எவ்வாறு அணுகுவது குறித்தும், ஊக்கப்படுத்தியும் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்கள். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சகோதரியின் பேரன் மற்றும் சென்னை காமராஜர் ஐஏஎஸ் அகாடமி கவுரவ இயக்குனருமான காமராஜ் மாணவ, மாணவிகளுக்கு குடிமைப்பணிகள் எழுதுவது பயிற்சி எடுப்பது தொடர்பாக விளக்க உரையளித்தார்கள். கரூர் மாவட்டம், காகிதபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் குடிமைப் பணி மூலம் தேர்வு எழுதி இந்திய காவல் பணியில் தேர்ச்சி பெற்றவர். மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பது குறித்த பல்வேறு வினாக்களுக்கு பதிலளித்து கலந்துரையாடினார்கள்.




முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போட்டி தேர்வர்களுக்கு பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தும் கலங்கரை விளக்கம் சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி -2ல் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு நினைவு பரிசு வழங்கி அடுத்த நிலை தேர்வில் வெற்றி பெற்று அனைவரும் அதிகாரிகளாக வரவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்கள்.


தொடர்ந்து கரூர் மைய நூலகத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கரூர் கர்மயோகி காமராசர் அறக்கட்டளையின் சார்பாக ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


நிறைவாக கர்மயோகி காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பாக 6 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர், சைபுதீன், மாவட்டநூலகர் சரவணக்குமார், மாவட்ட மைய நூலகர் சிவகுமார், கரூர் மாவட்ட வாசகர் வட்ட தலைவர் தீபம்சங்கர், கர்மயோகி காமராஜர் அறக்கட்டளை தலைவர் குணசேகர், கௌரவ தலைவர் சின்னசாமி மற்றும் கரூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.