ஜடாமுடி, உடல் முழுவதும் விபூதியுடன் காணப்பட்ட இவருக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உணவு வழங்கி வந்தனர். அதை பார்த்து அவ்வழியைச் சென்ற சிலர் தாங்களும் உணவு வழங்க முன் வந்தனர். ஆனால் அவர் புதியவர்கள் கொடுக்கும் உணவுகளை தூக்கி எறிந்தார். பழனி மலை அடிவாரத்தில் வாழ்ந்து மறைந்த சாக்கடை சித்தர் தனக்கு தரப்படும் வீடு, சிகரெட், பழங்கள், உணவு உள்ளிட்டவற்றை தூக்கி எறிவார். அவரையும், இவரையும் ஒப்பீடு செய்த பொதுமக்கள் மேற்கண்ட நபரையும் சித்தராக கருத தொடங்கினார். இதனால் பைபாஸ் சாலை வழியாக செல்வோர் தங்கள் வாகனங்களை இந்த இடத்தில் நிறுத்தி அவரை வணங்கி வருகின்றனர்.




கூட்டம் அதிகரித்ததால் விபத்து அபாயத்தை தடுக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் மேற்கண்ட நபருக்கும் நாகம்பள்ளி பிரிவு சாலை அருகே குடில் அமைத்து அங்கு தங்க வைத்துள்ளனர். இதனால் அவருக்கு விளம்பரம் கிடைத்த நிலையில் தற்போது இவரை தேடி பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் குடிலுக்கு முன்பு திடீர் கடைகளும் செயல்பட தொடங்கியுள்ளது. மலைக்கோவிலூர் சங்கமம் திருமண மண்டபம் பகுதியில் இவர் வாழ்ந்ததால் சங்கம சித்தர் என்றும், அரளிச் செடிகளுக்கு நடுவில் இருந்ததால் அரளி சித்தர் எனவும், இவரது பெயர் சுப்பிரமணி என்பதால் சுப்பிரமணி சித்தர் எனவும், அவரவருக்கு ஒரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.


10 ஆண்டுகளுக்கு முன் சுயநினைவின்றி மலைக்கோவிலுரர் அடுத்துள்ள தகரக்கொட்டகை பகுதியில் சுற்றி திரிந்தவர். அப்பகுதியில் உள்ள சாலையோர உணவகம் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் முன் வந்து அவருக்கு உணவு வழங்கி வந்தார். அவர் தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் உள்ள சென்டர் மீடியனில் உள்ள அரளிச்செடிகளுக்கு மத்தியில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டு, அதை தன் வசிப்பிடமாகமாற்றிக் கொண்டார். சில நாட்களாக அப்பகுதிவாசிகள் சிலர் அவரை அரளி சித்தர் என்றும், சாலையோர சித்தர் என்றும், அவரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். நினைத்த காரியம் ஜெயம் ஆகும் என தகவல் பரப்பினர். இந்நிலையில் கடந்த, ஒன்றாம் தேதி அப்பகுதியை சேர்ந்த சிலர், அவருக்கு குடில் அமைக்க போவதாக கூறி மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், நாகம்பள்ளி பிரிவு சாலை அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில், கீற்று கொட்டகை அமைத்து சென்டர் மீடியரில் படுத்திருந்த சுப்பிரமணியை, விபூதி பூசி தூக்கிச் சென்று குடிசையின் முன் பகுதியில் அமர வைத்தனர்.




அவருக்கு முன்புறம் உண்டியல் வைத்து வசூல் செய்து வருகின்றனர். மேலும் அங்கு வருபவர்களிடம் அன்னதானம் வழங்கப் போவதாக கூறி, சிலர் பணம் வசூலிக்கின்றனர். தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் கூட்டம், கூட்டமாக கார்வேன்களில் வந்து பார்த்து செல்கின்றனர். இரவு நேரங்களில் அவர் இருக்கும் இடத்தை கண்டு செல்வோர் வீசி செல்லும் பணம் நாணயங்களை எடுத்து மது அருந்த ஒரு கூட்டமே சுற்றி வருகிறது. மேலும், உண்டியல் வசூல் செய்யப்படுவது குறித்தும் அரவக்குறிச்சி போலீசார் மற்றும் தாசில்தாருக்கு தன்னார்வலர்கள் புகார் தெரிவித்த நிலையில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மனநலம் பாதித்த நிலையில் உள்ள சுப்பிரமணி உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எனவே ஆதரவற்ற நிலையில் சிலர் பிடியில் சிக்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவரை மீண்டும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து முதியோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




60 வயதான நிலையில் இவர் ஒரே நிலையில் அசையாமல் அமர்ந்திருப்பதை பார்க்கும் பொதுமக்கள், யோகாசனத்தில் கைதேர்ந்தவரால்தான் அப்படி அமர முடியும் என்ற தகவலை பரப்பி வருகின்றனர். வெறும் மிளகாய் மட்டுமே அரைத்து சாப்பிட்டு வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த மல்லி காஜூனர் சித்தரின் ஜீவ சமாதி அரவக்குறிச்சி புங்கம்பாடி பாலத்தில் உள்ளது. பழனி அருகில் கணக்கம்பட்டி சித்தர் மடம் தற்போது பிரபலமாகியுள்ளது. அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் நிறைய சித்தர்கள் வாழ்ந்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது. அந்த பட்டியலில் நாகம்பள்ளியில் இருப்பவரையும் சேர்த்து பொதுமக்கள் பேசி வருகின்றனர். இவர் சித்தாரா, ஜோதிடரா, அருள்வாக்கு சொல்பவரா என தெரியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் முன் வந்து பொதுமக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.