கரூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட தரிசு நிலங்களை விளைநிலங்கலாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி காகம்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.




கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் 80 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலப்பகுதியில் மண் ஆய்வு, நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். நீர்வளம் ஆதாரம் இருப்பின் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்சார வசதி அல்லது சூரியசக்தி பம்பு செட் மூலம் நீர் வசதி செய்து நீர் பங்கீடு முறைப்படி உகந்த பயிர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் 8 ஊராட்சிகளில் 80 தரிசு நில தொகுப்புகள் கண்டரிந்து அதன் 1509 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படவுள்ளது.  


மேலும், நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து முதல்வரின் மானாவாரி மேம்பாடு திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களில் இணைத்து நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் வருவாய்த்துறை மூலம் புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல் வழங்கும் பணிகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்கும் பணிகள் முன்னுரிமை அளித்து செய்யப்படும். 




இது குறித்து நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,


கரூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 46 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 29 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 46 கிராம பஞ்சாயத்துகளில் 80  தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் 1155 விவசாயிகளின் 1509 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பட உள்ளது. இந்தப் பருவத்தில் தரிசு நிலத் தொகுப்புகளில் உள்ள புதர்களை அகற்றி  நிலத்தை சமன்  செய்து  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்   தரிசு நில மேம்பாட்டு இனத்தில் சோளம் மற்றும் பயிறு  வகைப்பயிர்கள் விதைத்து  சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் குளித்தலை வட்டாரம், காகம்பட்டி குக்கிராமத்தில் 25 விவசாய பயனாளிகள் உள்ளனர்  இந்த தொகுப்பின் பரப்பு 15 ஏக்கர் ஆகும்.   தேர்வு செய்யப்பட்ட தொகுப்பில் 15 வருடம் சாகுபடி செய்யாமல் புதராக கிடந்த நிலத்தின் புதரினை அகற்றி நிலத்தினை சமன்படுத்தி உழவு மேற்கொண்டு உளுந்து விதைக்கப்பட்டது.




மேலும், தற்போது 10 ஏக்கரில் முருங்கையும், 2.5 ஏக்கரில் கொய்யாவும், 2.5 ஏக்கரில் நெல்லியும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் குழுவில் உள்ள உறுப்பினரின் வயலில் பொதுவான ஆழ்குமாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.  அதே போல் பண்ணைக் குட்டையும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மீன் மற்றும் வாத்து வளர்ப்பது சம்பந்தமாக கால்நடைத் துறை மற்றும் மீன் வளத்துறையின் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  


மேலும்  தொகுப்பில் உள்ள மக்கள் பயன்பெற கிராம சாலைகள், உலர்களம், பொது ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை அமைத்திடவும், தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை, நெல்லி, கொய்யா ஆகியவற்றினை நடவு செய்யவும்,         கால்நடை துறை மூலம் 60 ஆடுகள், 22 கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. 


பட்டு வளர்ச்சித் துறை மூலம் புதிதாக மல்பெரி சாகுபடி செய்யவும், இந்த தொகுப்பில் உள்ள பயனாளிகளின் குடும்பத்திற்கு வருவாய் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து செயல்படுத்தப்படும். இந்த தொகுப்பில் உள்ள வரப்பு பகுதிகளில் வேளாண்மைத் துறை மூலம் மகோகனி, செம்மரம், சூபாபுல் மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது. மேலும் விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் திரு.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரகவளர்ச்சி திட்ட இயக்குநர் திருமதி வாணிஈஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் திருமதி மணிமேகலை, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), திரு.க.உமாபதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரமாபிரியா,  வேளாண்மை பொறியியல் துறை, திரு.சுப்ரமணியன், கால்நடைதுறை இணை இயக்குநர் மரு.முரளிதரன், மின்சார துறை பொறியாளர் திரு.சாரங்கராஜன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.