கரூர் மாவட்ட எஸ்பியாக பதவியேற்ற பெரோஸ்கான் அப்துல்லா ஆயுதப்படை காவலரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் எலுமிச்சை கனி கொடுத்து அவரை வரவேற்றனர்.


 




தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில்  உத்தரவிட்டது. அதன்படி கரூர் எஸ்.பி ஆக இருந்த பிரபாகர், திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பதவியேற்றார்.


 




 


முன்னதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி., ஃபெரோஸ்கான் அப்துல்லா ஆயுதப்படை காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் எலுமிச்சை கனி மற்றும் பூங்கொத்து கொடுத்து அவரை இன்முகத்துடன் வரவேற்றனர்.


 


 




 


அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வழங்கி உள்ள செய்தி குறிப்பில்- காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்றும், குற்றங்களை தடுக்க அதிக அளவில் CCTV கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.


தற்போது பெருகிவரும் இணையவழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கணிணி வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நட்புணர்வு பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.


மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல் நிலையங்களை அணுகலாம் என்றும், காவல் நிலையங்களில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும், 9442149290 என்ற எண்ணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.