கரூர் மாவட்டத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 33வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1607 மையங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுசுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் RTPCR பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவருவதால், பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், மீண்டும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், கொரோனா தடுப்பூசி மருந்தே கொரோனா பெருந்தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம். இதனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர் தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் நாளை ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12-14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் (Corbevax Vaccine) மற்றும் 15-18 வயதுடையவர்கள் (Covaxin) போடப்பட்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இத்தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறும் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா பெரும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்