கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பாரிசாக வழங்கினார். கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு  Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணத்தை கமல்ஹாசன்  ஷர்மிளாவுக்கு வழங்கினார். வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பணியை தொடர உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாவும், ஷர்மிளா தன் வயதையொத்த பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக கமல் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. 


பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.


தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.


ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.  


கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். 


ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 


மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கோவை ஷர்மிளா என்றால் அறியாதவர்கள் இல்லை. ஏனென்றால் இளம் வயதில் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனராக பொதுமக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷர்மிளா.கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மகள் ஷர்மிளா. இவருக்கு வயது 24. இவரின் விருப்பத்தின் பேரில் இவரின் தந்தை ஷர்மிளாவுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோவை மாநகர் பகுதிகளில் இளம் பெண் ஷர்மிளா ஆட்டோ ஓட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனையடுத்து கனரக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தந்தையிடம் கூறியுள்ளார் ஷர்மிளார்.  அவரும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு மகளை அனுப்பி உள்ளார். அங்கு கனரக வாகனங்களை ஓட்ட கற்றுக் கொண்ட ஷர்மிளா, தனியார் பேருந்து ஓட்டுநராக களமிறங்கினார்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவர் ஆண்களுக்கு நிகராக பேருந்தை இயக்கிய காட்சிகளை  வைரலானது. மேலும் பெண் ஒரு பேருந்தை ஓட்டுகிறாரா என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்கவே அந்த பேருந்தில் பயணித்த கூட்டமும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர்  ஷர்மிளாவுக்கு வாழ்த்துதெரிவித்தனர்.


இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்  எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டுநராக பணி புரிந்த பேருந்தில் பயணம் செய்ததுடன் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ஏற்பட்ட  பேருந்து உரிமையாளருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நிர்வாகம் தரப்பில் ஷர்மிளா அவரே வேலையில் இருந்து ராஜினாமா செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.