கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியர் ஹரிபத்மன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக் குழுவின் சுமார் 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கை முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹரிபத்மன் உண்மையிலேயே குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கவேண்டுமென விசாரணக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி நுண் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் கல்லூரி செயல்படுகிறது. பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பல முக்கியக் கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு. இதனால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இங்கு சாதி ரீதியாகப் பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


ஆசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் புகார்


இந்த நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் ஹரிபத்மன் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். எனினும் இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. 


இந்த நிலையில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது, மாணவிகள் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்தனர். ஆனால், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்ததாகவும் தகவல்கள் வெளியாகின 


c.a.r.e.spaces மூலம் புகார்


இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர் ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்.அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர் ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.


தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.


மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். எனினும் ஹரிபத்மனுக்கு நிபந்தனையின்பேரில் ஜூன் 3ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 


விசாரணைக் குழு அமைப்பு


ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் ராமதுரை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார். குழுவில் ஓய்வுபெற்ற டிஜிபி லத்திகா சரண் மற்றும் டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு இடம்பெற்றனர். இந்தக் குழுவின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.


அதிகபட்ச தண்டனை
 
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு விசாரணைக் குழுவின் சுமார் 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கை முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹரிபத்மன் உண்மையிலேயே குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய விசாரணைக் குழு உறுப்பினர், விசாரணை நடத்தியதில், ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 


இதனால், விசாரணைக் குழு அவருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த விவரங்கள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட உள்ளன. எனினும் சம்பந்தப்பட்ட நபர்களின் தனியுரிமை கருதி, முழு அறிக்கைக்குப் பதில், அறிக்கையின் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று விசாரணைக் குழு அறிவுறுத்தி உள்ளது.


மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்க


விசாரணைக் குழு, கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாக அமைப்பு சார் விதிமுறைகளை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் பரிந்துரைத்துள்ளது.