தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் பணிகளை கடந்த 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேது துவங்கும் இந்த விண்ணப்ப விநியோகம் 4ஆம் தேதிவரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பங்களை விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மகளிரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ,


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே அதற்காக, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், முகாம் நடைபெறும் நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் விண்ணப்பங்களையும் நியாவிலைக்கடை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்நிலையில்  தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் பயனாளர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர், திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் செயலாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் தமிழ்நாடு அரசு அடுத்தகட்டமாக மக்களிடம் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்குமான பணி வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தின் பயனாளர்களை விரைவில் அனுகி அவர்களை பயனடையச் செய்யமுடியும் என அரசு சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது.