சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, இன்று நடைபெற்று பிரிவு உபசார விழாவில்  பெற்றோருக்கு நன்றி தெரிவித்த நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார். 


நீதிபதி என். கிருபாகரன் கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2011 ஆம் ஆண்டு, இந்திய  நிரந்தர நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் . 62 வயது பூர்த்தியாவதையொட்டி, நாளையுடன் (ஆகஸ்ட் 20 ஆம்) அவர் ஓய்வு பெறுகிறார். இன்று மாலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.


இந்த விழாவில் பேசிய அவர், " தமிழ்நாடு  முன்னாள் சட்டமன்ற சபாநாயரும், எழுத்தாளருமான புலவர் கா. கோவிந்தன், தமிழ் பேராசிரியர் அமலநாதன் ஆகிய இருவரும் எனக்கு ஊக்கமளித்து வழிகாட்டியவர்கள். எனது பள்ளி ஆசரியர்களான மறைந்த கணியப்பன், வீரபத்திரன், கனநாதன் ஆகியோருக்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் மூத்த அரசு வழக்கறிஞர் மறைந்த ஹபிபுல்லா பாஷாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த ஆளுமையான அவர், தனது 38வது வயதில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி செய்யும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டார். மற்றொரு சீனியரான டி.பி சங்கரன் எனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். நான் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பிறகு, ஹபிபுல்லா பாஷா உள்ளிட்ட எனது மற்ற சீனியர்கள், எனது முன் வாதாட வரவில்லை. இது, ஆரோக்கியமான போக்கு என்று அவர்கள் கருதினர். நீதித்துறையில் இந்த போக்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும். நாம் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.       




நீதிபதி என். கிருபாகிரனின் தீர்ப்பு தமிழ்நாடு அரசியலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. உதாரணாமாக, மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத் திருத்தம்  செய்வதற்கும் முன்பே பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று யோசனையை முதலில் வைத்தவர். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில், மாணாக்கர்களின் தற்கொலையை அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், நூறு நாள் வேலை மிகவும் பயனுள்ள திட்டம்.  ஆனால் அந்தத் திட்டத்தின் பணியாளர்கள் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி, பொழுது போக்குவது கேவலமானது என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று  இவரது தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த தீர்ப்பால் காவல்துறையின் அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்று கூறி, மதுரை வழக்கறிஞர்கள்  தலைக்கவசத்தை தீயிட்டு கொளுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


 


மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு தொடர்பான வழக்கில், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் இருவரும் நேரடி வாரிசுகள் என இவரது தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.


மேலும், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க வகை செய்ய வேண்டும், கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு வாதங்ங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைவது தொடர்பாக அரசுப் பள்ளி  ஆசரியர்கள் போராட்டம்  நடத்தினர். இது,தொடர்பான வழக்கில், தனியார் கல்வி நிறுவனங்களை விட அதிகம் ஊதியம் வாங்கிக் கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா?  என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.