ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.


ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். வருகின்ற 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. 


இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துரை அமைச்ச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாளை மறுநாள் (டிசம்பர் 22ம் தேதி) ஆலோசனை நடைபெற இருக்கிறது.


சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமான ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப பொங்கலுக்கு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.