உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க அரசு ஊழியர் முயன்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் குமாரவேல். இவர் மீது பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை 3 மாதமாக குறைக்கக் கோரி குமாரவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி, "இந்த வழக்கின் மனுதாரர் எனது உதவியாளர்களிடம் நேரிலும், போனிலும், இந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறியுள்ளார்" என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, "லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரர் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாகக் கூறியுள்ளார்.


மனுதாரரின் இந்தச் செயலைக் கடுமையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணை நடத்தி ஜனவரி 19ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.