கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான பயிற்சிக் கூட்டம், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைப்பெற்றது.  சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் சமீரன் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சிக் கூட்டத்தில், மாநகராட்சியின் உதவி வருவாய் அலுவலர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், ” சென்னையில் உள்ள 1,417 கடைகளில் விண்ணப்பங்கள் பெறும்போது முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. விண்ணப்பங்கள் பெறுவதற்கான கட்டடங்கள் அடையாளங் காணப்பட்டன. அரசின் அறிவுரைப்படி பள்ளிகள், சமுதாய நலக் கூடங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணி நடைபெற உள்ளது. ரேஷன் கடைகளைப் பொறுத்தவரை 1 முதல் 500 குடும்ப அட்டைகள் இருக்க கூடிய 13 கடைகளும், 2000-2500 அட்டைகள் இருக்க கூடிய 23 கடைகள் உள்ளன. விண்ணப்பம் பெறுவதற்கு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பங்கள் பெறும் பணியைப் பொறுத்தவரை அரசின் அறிவுறுத்தல்படி அரசு என்று சொல்கிறதோ அன்று தொடங்கப்படும்” என தெரிவித்தார்.  

Continues below advertisement

மேலும், “குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்  முன்கூட்டியே வழங்கப்பட்டு அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படும். பொதுமக்கள் பதற்றமின்றி வந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத சூழலிலும் அவர்களையும் திட்டத்தில் இணைத்து பயன்பெற வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவி செய்து திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசிது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஆவணம் இல்லை என்றால் அதற்குரிய உதவி செய்ய பிறதுறை அதிகாரிகள் முகாமில் உடன் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொள்ள வேண்டும். வங்கியில் கணக்கு இல்லை என்றால் உடனடியாக zero balance கணக்கு வங்கியில் உருவாக்கி தரப்படும். விண்ணப்பிக்க வங்கி சார்ந்த வேறு உதவிகளுக்கும் உடன் அதிகாரிகள் இருப்பர். மாநில அரசின் அறிவுறுத்தல்படி செயல்படுவொம். தன்னார்வலர்களை கொண்டு விரைவாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்”, என குறிபிட்டுள்ளார்.