வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Continues below advertisement

புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். வியாழக்கிழமை 20.31 அடியை எட்டியது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரி நிரம்ப இன்னும் ஒன்றரை அடி நீர் மட்டுமே தேவை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 400 கனஅடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், மஞ்சம்பாக்கம், மணலி, எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது. இதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில் பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது.

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 2.916 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர் வரத்திற்கு ஏற்றார் போல வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.