தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல் முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு வரும் 10 ஆம் தேதியே மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.


பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 


இந்நிலையில் விண்ணப்பித்த பலருக்கும் பணம் கிடைக்கவில்லை என்றும் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் புகார் எழுந்த நிலையில், மீண்டும் விண்ணப்பிக்க அரசு அறிவித்தது. மகளிர் உரிமை திட்டத்தில் உள்ள 1.65 கோடி பயனாளிகள் உள்ளனர். வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 11.85 லட்சம் மகளிர் விண்ணபித்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. மேலும் வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், அதற்கு முன்கூடியே மகளிர் உரிமை தொகை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு வரும் 10 ஆம் தேதியே பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக,  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்  என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்றும் வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.