தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15 ஆம் தேதி ஒட்டி வட கிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதல் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லையில் கனமழை கொட்டி வந்தது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வரண்ட வானிலையே காணப்பட்டது.


ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் வடகிழக்கு பருவமழை சற்று  வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் அனேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை 49% குறைவாக பதிவாகியுள்ளது என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு  பகுதி  உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். அதுமட்டுமின்றி குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. நாளை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. வட கிழக்கு பருவமழை மெதுமெதுவாக வலுவடைந்து வரும் நிலையில் இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று வெயிலில் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் அனேக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலும் மழையும் என குழப்பமான வானிலை இருந்து வருகிறது. இன்று காலை ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், திடீரென வெப்பநிலை அதிகரித்து வெயில் வரத்தொடங்கியது.


கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (செண்டிமீட்டரில்):


நேற்று மட்டும் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 23 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


அதனை தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்) 14, நம்பியூர் (ஈரோடு மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்) 12, ஆழியார் (கோவை மாவட்டம்) 11, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) தலா 10, வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்), தூத்துக்குடி பி.டி.ஓ (தூத்துக்குடி மாவட்டம்), பவானிசாகர் (ஈரோடு மாவட்டம்), விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) தலா 9,  கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்), ஓட்டப்பதிரம் (தூத்துக்குடி மாவட்டம்), குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி மாவட்டம்), மேலூர் (மதுரை மாவட்டம்), பொதுப்பணித்துறை (திருப்பூர் மாவட்டம்), ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்), களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.