இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜுன் 3 ஆம் நாளன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்:  


ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.


 கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:-



  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.

  • பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்

  • இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்

  • விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்

  • விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்

  • இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது


மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு 30.4.2023 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.