திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"ஆணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரின்  சொத்து விபரங்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது. இதில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை, மற்றும் வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த ஐந்து வருட வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கோரப்படவில்லை. எனவே மேற்கூறிய விவரங்களை குறிப்பிட பிரமாண பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும்.

 



 

உச்சநீதிமன்றம் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த உத்தரவிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அதனை 2019 பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்தியது. ஆனால் ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகவே அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவும், அதுவரை நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிராமண பத்திரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பெறவும், அதனை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில், " இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகராட்சி தேர்தலுக்கானது அல்ல" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், " உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு உள்ளதா?" என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் தரப்பில் இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது இதை ஏற்று நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.