அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக சேர வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால் அது இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை என்று சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தர்மலா ஸ்ரீ பெருமிதத்துடன் தெரிவித்தார்.



சேலம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மகப்பேறு விடுப்பிற்காக சேலம் வந்த அவர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். கடந்த வாரம் தர்மலாஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக சேர்ந்த தகவல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.


இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த தமிழியக்கம் அமைப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சந்தித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மலாஸ்ரீ கருவுற்ற நேரத்தில் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை கிடைக்கிறது என்பதை அறிந்து மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் தான் சேர வேண்டும் என்று குடும்பத்தாருடன் கலந்துபேசி முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனை குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே வர வேண்டும் என்ற நோக்கில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு சேர்ந்தேன் ஆனால் அது இவ்வளவு  வைரலாக பரவும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.


ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கூட மகப்பேறு சிகிச்சைக்கு நகைகளை அடகு வைத்தாவது தனியார் மருத்துவமனையை நாடுகின்ற சூழ்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மிகுந்த அக்கறையோடு சிறந்த சிகிச்சை வழங்கியதாகவும் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கு தன்னை உறவினர் போல பாவித்து உதவிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் தர்மலாஸ்ரீ தனது நன்றியை தெரிவித்தார். முழுமையான சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்ப உள்ளார். 



குழந்தை பிறந்த அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரடியாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்குச் சென்று தர்மலா ஸ்ரீயை நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தர்மலா ஸ்ரீ ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.