பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய நாட்களில்‌ நந்தம்பாக்கத்தில்‌ உள்ள சென்னை வர்த்தக மையத்தில்‌ ஆறு கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற இருக்கிறது. ஆங்கில எழுத்துலகத்தில்‌ இருப்பதைப்‌ போலவே 20 இலக்கிய முகவர்களைப்‌ பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. எழுத்தாளர்களுக்கும்‌ வெளிநாட்டுப்‌ பதிப்பு நிறுவனங்களுக்குமான பாலமாக இந்த இலக்கிய முகவர்கள்‌ இருப்பார்கள்‌.


தமிழ்ப்‌ படைப்புகள்‌ உலகின்‌ பிற மொழிகளுக்குக்‌ கொண்டு செல்லப்படும்‌. இந்தியாவில்‌ எந்த மொழிக்கும்‌ இப்படி இலக்கிய முகவர்கள்‌ இல்லை என்கிற அளவில்‌ இந்த முயற்சியை நாம்‌ மேற்கொண்டு வருகிறோம்‌. இந்தப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள கடிதம்:


’’தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சியை நேரில் வந்து தொடங்கி வைக்க இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் அது இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நிகழ்வு மிகப் பெரும் வெற்றியடையவும் அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் வாழ்த்துகிறேன்.


பொற்கிழி விருது! 


புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது என்பது மற்றுமொரு தொழில் அல்ல. இது அறிவுத்தொண்டு! தமிழாட்சியும் தமிழர்களின் ஆட்சியும் நடைபெறும் நம்முடைய தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுத் திருவிழாக்கள் தமிழ்த் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும். அதற்கு ஊக்கமளிக்கும் வகையில்தான் படைப்பாளர்களுக்கு உற்ற தோழராக விளங்கிய கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியின், உமா மகேசுவரி, தமிழ்மகன், அழகிய பெரியவன், வேலு. சரவணன், மயிலை பாலு ஆகியோர் இந்த ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் பபாசியின் விருது பெற்றுள்ள பிற படைபாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.


தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், ஊடகவியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்குச் சிற்றதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், திசைதோறும்திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என்று ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கல்விக் கழகமும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டு விற்பனைக் களத்தில் உயர்ந்து நிற்கிறது.


தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி. 
உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுக்க எடுத்துச் செல்லவும் சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் அவற்றை வழங்கவும் நடத்தப்படுகிற இந்தப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.


20 இலக்கிய முகவர்களைப் பயிற்சி


வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் இது நடைபெற இருக்கிறது. ஆங்கில எழுத்துலகத்தில் இருப்பதைப் போலவே 20 இலக்கிய முகவர்களைப் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்குமான பாலமாக இந்த இலக்கிய முகவர்கள் இருப்பார்கள். தமிழ்ப் படைப்புகள் உலகின் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படும். இந்தியாவில் எந்த மொழிக்கும் இப்படி இலக்கிய முகவர்கள் இல்லை என்கிற அளவில் இந்த முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.


அதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த இன்னொரு மிக முக்கியமான வைகை என இலக்கியத் திருவிழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இளைஞர் இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட இருக்கிறது. இலக்கியம் என்பது இயக்கமாக மாற வேண்டும்.


அன்றாட பழக்கமாக வாசிப்புப் பழக்கம்


மனிதரின் அன்றாட பழக்கமாக வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஒரு இயக்கமாகவே நான் உருவாக்கி இருக்கிறேன். எனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை கிராமப்புற நூலகங்களுக்கும் வாசக சாலைகளுக்கும் வழங்குவதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்.


தமிழினம் சிறக்க வேண்டுமானால் தமிழ்மொழி சிறக்க வேண்டும்! தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும் ! தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணைநிற்கட்டும் ! 47ஆவது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.