சுந்தந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.




இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆலுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், “நாளை (15.08.2023) ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீவிர மழை காராணமாக ஆளுநர் மாளிகையில் உள்ள தோட்டத்தில் நீர் தேங்கியிருக்கிறது. மேலும், இந்திய வானிலை மையம் மழை தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிண்டி பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேநீர் விருந்து இன்னொரு நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




சுதந்திர தின விழா 


சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரில் 9,000 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரையாற்றுகிறார். இதனால் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் இருப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்தாண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


வண்டலூர் உயிரியல் பூங்கா


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 15 ஆம் தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.