சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டில் தொடக்கத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான  இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அமைந்தக்கரையில் இருக்கிம் கட்டுமான நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். 


சென்னை கோவை ஈரோடு விருதுநகர் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான அலுவலகம் நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையைப் பொருத்தவரையில் அமைந்தகரை கீழ்பாக்கம் எழும்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


ஈரோட்டில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி எம் கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ம் தொடர்பான நான்கு இடங்கள் ஈரோட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் செயல்பட்டு வருகின்றன இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனம் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அவரது மண்டபம் ஆகியவற்றை கட்டுமான பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமானங்களையும் கொச்சினில் உள்ள வருமானவரித்துறை அலுவலகமான ஆயக்கர்பவனையும் இந்த கட்டுமான நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் தொடர்பான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு செயல்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.


இதேபோன்று கீழ்பாக்கம் ஈகா திரையரங்கிற்கு அருகில் ராஜரத்தினம் தெருவில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடர்பாக எழும்பூரில் காசா மேஜர் சாலையில் இருக்கும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.


சின்னிப்பாளையம் குழந்தைசாமி பாலசுப்ரமணியம் மற்றும் சின்னி பாளையம் குழந்தைசாமி வெங்கடாசலம் ஆகிய இருவரும் சேர்ந்து சி எம் கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நடத்தி வருகின்றனர் இவர்கள் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சி கே பாலசுப்பிரமணியம் இயக்குனராக இருந்து வரும் கிரீன் பீல்ட் மற்றும் ட்ரிநிவியா கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


கோவையில் எல்லன் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் தொடர்பான இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காளப்பட்டி சாலையில் உள்ள கிரீன் பீல்ட் ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும்
பத்துக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சோதனை செய்யும் இடங்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்பந்தத்தை மேற்கொண்டு முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வந்ததை அடிப்படையாக வைத்து இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


இன்னும் இரண்டு நாட்கள் இந்த சோதனை நடைபெறும் எனவும் சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகை மற்றும் அடையாளம் காணப்பட்ட கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து தெரிவிக்கப்படும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது