ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று தனது வேட்பமனுவை ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். 

Continues below advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர்  மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். 

இருதரப்பு அதிமுகவும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். இதனால் யார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்? யாருக்கு இரட்டை இலை வழங்கப்படும்? அல்லது இரட்டை இலை சின்னம்  முடக்கப்படுமா? அல்லது இருவரும் இணைந்து ஒரு வேட்பாளரை அறிவிப்பார்களா என்ற குழப்பமும் இருந்தது.

இருவரும் வேட்பாளர் அறிவித்த நிலையில், இரண்டு பேரும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம்  முடக்கப்படும் என்ற நிலை இருந்தது. இது தொடர்பாக நேற்றைய தினம் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அப்போது தேர்தல் ஆணையம் அவரை அதிமுக அவைத்தலைவராக அங்கீகரித்தது. அதாவது அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஈ.பி.எஸ் தரப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கையில், “இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுகிறார். தென்னரசுக்காக இல்லை, இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம், வாக்கு சேகரிப்போம். இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு, அதன் வெற்றிக்காக பாடுபடுவோம்." என தெரிவித்தார். 

இவை அனைத்தும் சேர்த்து அதிமுக வேட்பாளர் தென்னரசு என்று முடிவுக்கு வந்தது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்ப மனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கலுக்கான படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டார். மேலும் பா.ஜ.க தரப்பில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என அண்ணாமலை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.