தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிர் செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கும், அதாவது வெப்பநிலை 106 டிகிரியை எட்டக்கூடும்  எனவும் வெப்பச்சலனம் மற்றும் மேல்திசைக் காற்றின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் இதனால் மதிய நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்க்கும் படி, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் சூரியனின் வெப்பம் அதிகரித்தது. இதனால் ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலை வீசியது. அதிகப்படியான வெப்பத்தினால் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. மேலும், தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்தது. அதிகப்படியான வெப்பத்தினால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத் தீ உருவாகி மூன்று நாட்களாக நீடித்தது.  மக்கள் கோடையில் ஏற்கனவே அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு பகீர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 


அதாவது, இன்றும் (மே, 15) நாளையும் (மே, 16) தமிழ்நாட்டில் வெப்பநிலை 106 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரித்துள்ளது. அதேபோல், வெப்பசலனம் நீடிப்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. 


அதிகபட்ச வெப்பநிலை :  


 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தென்மேற்கு வங்கக்கடல் &  இலங்கை கடலோர பகுதிகள்:


 15.05.2023: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும்   வீசக்கூடும்.


மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.05.2023:  சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை  வரை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.


மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.05.2023:  மாலை வரை சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.05.2023: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 200  முதல் 210  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 230  கிலோ மீட்டர் வேகத்திலும் நண்பகல் வரை வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.


வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.05.2023:  சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 60  முதல் 70  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.



மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.