தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அதேபோல் வரும் சனிக்கிழமை (4 ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு. கடந்த 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில் ஒரு மாவட்டத்தில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிக அளவிலும் ஆறு மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பு விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பு விட மிகக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வபோது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.