நடிகர் விவேக் விரைவில் நலம்பெற்று வர பிரதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. 






பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு காரணம் கொரோனா தடுப்பூசியல்ல என்பதை சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர், தி.மு.க. தலைவர் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் தவிர, பல்வேறு திரைப்பிரபலங்களும் விவேக் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.