காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.


“தமிழகத்தில் உள்ள  தொழிற்சாலைகளில் 80 சதவீத தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும். ஆனால், சிஎஸ்கேயில் ஒரு தமிழர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார்.”


மேலும், “மாநிலத்தில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் தமிழகத்தை சேர்ந்த  அணி என்று பெருமை கொள்கிறது. ஆனால் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை" என அன்புமணி ராம்தாஸ் பேசியுள்ளார்.  


நடப்பு ஐபிஎல் சீசன் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி இந்த வினாவை எழுப்புவது இது முதல் முறை அல்ல. தருமபுரியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) எஸ்பி வெங்கடேஷ்வரன், கடந்த மாதம் சட்டமன்றத்தில் சிஎஸ்கே தன்னை தமிழ்நாடு மாநிலத்தின் அணியாகக் கருதுகிறது. ஆனால் அதில் எந்த வீரரும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.


ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி:


ஐ.பி.எல். தொடர் அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வரும் தோனி தலைமையிலான சென்னை அணி, நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதோடு, இந்திய அணிக்காக ஆடிய ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் போன்ற தரமான தமிழக  வீரர்களை அடையாளம் காணவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது. இளம் வீரர்களுக்கும், தமிழகத்தை மையமாக கொண்ட அணியில் தமிழக வீரர்கள் யாரும் ஆடும் லெவனில் இடம்பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


மினி ஏலத்தில் சென்னை அணி:


கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்தில் கூட, தமிழகத்தை சேர்ந்த பல இளம் வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், தமிழக வீரர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதிலாக, இந்திய அணிக்காக விளையாடி வரும் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கும், ஷேக் ரஷீத் ரூ.20 லட்சத்திற்கும், நிஷாந்த் சிந்து ரூ. 60 லட்சத்திற்கும், கைல் ஜேமிசன் ரூ.1 கோடிக்கும் மற்றும் அஜய் மண்டல் என்பவரை ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. 


மற்ற அணிகளில் தமிழக வீரர்கள்:


முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கவில்லை. இந்நிலையில், ஏலத்தின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை . 


குஜராத்:


விஜய் சங்கர்
சாய் கிஷோர்
சாய் சுதர்ஷன்


ராஜஸ்தான் ராயல்ஸ்:


முருகன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


ஜெகதீசன் நாராயண்
வருண் சக்ரவர்த்தி


சன் ரைசர்ஸ் ஐதராபாத்:


தங்கராசு நடராஜன்
வாஷிங்டன் சுந்தர்


பஞ்சாப் கிங்ஸ்:


ஷாருக்கான்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ:


தினேஷ் கார்த்திக்