தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நடைபெற்று வருகின்றது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதவி எண்கள் மற்றும் செல்போன் செயலிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட போக்குவரத்த் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சம்பவங்களை தடுப்பதற்கான பிரத்தியேக உதவி எண்கள் மற்றும் செல்போன் செயலிகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர காவல் கண்காணிப்பாளர் வினோத் மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன், கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வரும் பெண் பயணிகளை அவர்களது வீட்டிலே இறக்கி விட வேண்டும். அதேபோல் சந்தேகப்படும்படியாக ஆட்டோக்களில் பெண்களை யாரேனும் அழைத்து வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

 



 

மேலும் இரவு நேரங்களில் தங்க நகைகள் அதிகமாக அணிந்து வருபவர்களை பாதுகாப்பாக அவர்களது இடத்தில் இறக்கி விட வேண்டும். மேலும் ஒரு சில இடங்களில் குற்ற சம்பவங்கள் நிகழுமானால், அதனை கண்டு கொள்ளாமல் செல்லக்கூடாது. காவல் துறையின் உதவி எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். அதுப்போல் செயலிலயை செல்போன் பதிவிறக்கம் செய்து கொண்டு, குற்ற சம்பவங்கள் நடக்கும்போது, அந்த செயலி வழியாக போட்டோ, வீடியோ எடுத்தால், அது காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் பாதிவாகிவிடும். அதனை காவல் துறையினர் பார்த்து, சம்பவம் நடக்கும் இடத்தை அறிந்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள். தொடர்ந்து உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். இந்த செயலியை பெண்கள் மட்டுமல்ல ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது செல்போன் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் கண்காணிப்பாளர் வினோத் வழங்கினார்.

 



 

மேலும் இதையடுத்து அனைத்து ஆட்டோக்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு  உதவி எண் மற்றும் செயலி கொண்ட ஸ்டிக்கர்களை தருமபுரி நகர, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் ஓட்டினார். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னசாமி, ரகுநாதன், மாது, போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.