தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக  கோடை மழை பெய்து வருகிறது. தினமும் மழை பொழியும்போது, அதிவேகமாக சூறைக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி,கடத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை சூறைக் காற்றுடன் கூடிய பெய்த கனமழை பெய்தது. இந்த சூறைக் காற்றுக்கு  கடத்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரது தோட்டத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 200-க்கும் மேற்பட்ட கற்பூரவள்ளி ரக வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. இதேபோல்  கந்தகவுண்டனூர் கிராமத்தில், சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 250-க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது.

 

இதில் வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தது.  தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் கடந்த ஒரு வாரத்தில், சூறைக் காற்று வீசியதில், பாப்பிரெட்டிப்பட்டி, மெணசி, பூதநத்தம், துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், புட்டிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலான ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

 



 

மேலும் வாழை பயிரிட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளதால், சேதமடைந்துள்ள வாழை தோட்டத்தினை வருவாய் துறையினர் முறையாக ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சூறைக் காற்றால், அறுவடைக்கு தயாராக வாழை சேதமடைந்ததில், விவசாயிகளுக்கு 60 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 








தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு மாம்பழ சீசன் காரணமாக மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத் துவங்கி உள்ளது.  இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தருமபுரி பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, டாக்கீஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கடைகள், மாம்பழ குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு சில குடோன்களில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

 



 

இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த மாம்பழங்களை, தடங்கம் குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். மேலும் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்க கூடாது. அவ்வாறு மீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.