தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஓரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்கு ரோடு, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், கடைவீதி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோன்று சேலம் நிலபாரப்பட்டி அருகில் சேலம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு சொல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



நேற்றைய மழை நிலவரம்:


சேலம் மாநகர பகுதியில் நேற்று ஒரே நாளில் 76.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக ஏற்காட்டில் 88.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், சங்ககிரியில் 79.2 மி.மீ, டேனிஸ்பேட்டையில் 75 மி.மீ, ஏத்தாப்பூர் 62 மி.மீ, ஆணைவாரி 57 மி.மீ, ஓமலூர் 55.3 மி.மீ, வாழப்பாடியில் 50 மி.மீ, மேட்டூரில் 46.6 மி.மீ, எடப்பாடியில் 23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் 790 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த பருவ மழையில் 24 மணி நேரத்தில் பெய்த மழையை காட்டிலும் அதிகமாகும்.



ஏற்காட்டில் கனமழை:


இதேபோல், ஏற்காட்டில் கடந்த ஐந்து நாட்களாக கடும் பணி நிலவி வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஏற்காட்டில் காட்டும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்காடு பேருந்து நிலையம் படகு இல்லம், அண்ணா பூங்கா, சேர்வுராயன் மலை, லேடிஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் திடீர் மழையால் ஏற்காட்டில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இந்த திடீர் நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.