இரவு முதல் பெய்து வரும் கனமழையால்  சென்னை சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை  நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


 










தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்புமாறும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலானா இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானாது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.