"தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"
வடகிழக்கு பருவமழை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, நேற்று காலை மேலும் வலுவிழந்தது. இதனால் இன்று தமிழ்நாட்டில் பரவலாக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இன்று காலை (05-12-2025) 10 மணி வரை, ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு காலை 10:00 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.