Rain Alert:  கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகனமழை எச்சரிக்கை:


வடகிழக்கு பருவமழையை ஒட்டி உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்களில் கடந்த நான்காம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போது தான் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இந்நிலையில், தென்மாவட்டங்களில் கனமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. அந்த வகையில், தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை, கன முதல் மிக கனமழை பெய்யும் என பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4 மாவட்டங்களில் பொது விடுமுறை:


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் தென்மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


இதனிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகரில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:


அதிகனமழை பாதிப்பை எதிர்கொள்ள தென்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், மீட்பு பணிகளைத் உடனடியாக துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். 


தேர்வுகள் ரத்து:


இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 4 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான  கணிதம் பாடத் தேர்வும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன.