Rain EB Warning: மழைக்காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்களை, மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


தொடங்கியது பருவமழை - மின்சார வாரியம் எச்சரிக்கை:


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைய தொடங்கியுள்ளது. வடமாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் மின்சார வாரியம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


மின்சார விபத்துகளை தடுப்பது எப்படி?



  • வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCBஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்

  • ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. மேலும் குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது.

  • ப்ரிட்ஜ், - கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிக்கு நில இணைப்புடன் (Earth) கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

  • பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக்கூடாது

  • உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள், மற்றும் பழுதான மின் சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருப்பின், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

  • சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும் . குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது

  • விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

  • இடி, மின்னல், காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்

  • மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது.

  • மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

  • மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

  • மின் கம்பத்திலோ, மின் கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக் கூடாது.

  • மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது

  • மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

  • டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

  • வீடுகளில்,மின் கம்பங்களில் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயலக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்