மழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், இன்று (09.12.2023) மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும்  மழை எச்சரிக்கை உள்ளதாலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர்  வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 09.12.2023 ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. 


7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:


ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 7 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் என அனைத்தும் இன்று இயங்காது. வரும் திங்களன்று அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண பணிகள் மற்றும் பள்ளிகள் சீரமைப்பு பணிகளால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 


இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


அரபிக்கடல் பகுதிகள்:


09.12.2023 முதல் 10.12.2023 வரை:  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.