தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கனமழை எச்சரிக்கை:


தென்தமிழகம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதியில்  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கியது. கடந்த மாதம் மழையின் அளவு சுமார் 43% குறைவாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது.


நாளை, நாளை மறுநாள் நிலவரம் எப்படி?


தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.  


நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என கூறப்படுகிறது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நகரின் அனேக பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அக்டோபர் மாதம் சென்னைக்கு மழை இல்லை என்றாலும் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இன்றும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.