தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரிய் ஆகிய மாநிலங்களில் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக விட்டு விட்டு இலேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மேலும் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


இப்படியான நிலையில் தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் அம்மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி விடுமுறையில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த மழை விடுமுறை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மழை தொடருமா? 


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “நாளை (நவம்பர் 15 ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பர் 16 ஆம் தேதி கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


சென்னையில் மழை இருக்கா?


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான-கனமழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த 3 மணி நேரத்துக்குள் (காலை 9 மணி வரை) ஆற்காடு, செய்யூர், மதுராந்தகம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு, சோளிங்கர், அம்பத்தூர்  அரக்கோணம்,செய்யூர்,கும்மிடிப்பூண்டி,மதுராந்தகம்,பொன்னேரி,ஸ்ரீபெரும்புதூர்,திருக்கழுகுன்றம்,திருப்போரூர்,திருவள்ளூர்,திருவொற்றியூர்,திருத்தணி,உத்திரமேரூர்,ஊத்துக்கோட்டை,மாதவரம் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.