புதுச்சேரி: சந்திர பிரியங்காவை தந்தை போல முதல்வரும், சகோதரர்கள் போல் அமைச்சர்களும் பார்த்து கொண்டதாகவும், நல்ல அன்பான குடும்பத்தை சுயநலம் காரணமாக சந்திர பிரியங்கா கெடுத்துக் கொண்டதாகவும் ஆளுநர் தமிழிசை கூறினார்.


ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:


அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமாவா, நீக்கமா என்பது பற்றி பதில் சொல்ல மாட்டேன். ஏற்கெனவே சொல்லிவிட்டேன். மத்திய அரசு ஒப்புதல் தாமதமாவது பற்றி கேட்கிறீர்கள். நிர்வாக ரீதியாக சில சட்டத்திட்டங்கள் உள்ளது. நிர்வாக ரீதியாக வரும்போது தெரியும். பல உண்மைகள் அப்போது தெரியும். சந்திர பிரியங்காவை தந்தை போல முதல்வரும், சகோதரர்கள் போல் அமைச்சர்களும் பார்த்து கொண்டனர். நல்ல குடும்பமாக வேலை செய்யும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். அனைத்து பெண்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பெண் அமைச்சருக்கு மரியாதை தருவதில் யாரும் குறைவைக்கவில்லை. என் தரப்பிலும் எந்த தவறும் இல்லை. இந்த குற்றச்சாட்டை பிரியங்கா சொல்லியிருக்கக் தேவையில்லை.


முன்னாள், இந்நாள் துணைநிலை ஆளுநர்களுடன் சண்டையிடும் எண்ணத்திலேயே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளார், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை எந்த விதத்திலும் மீறவில்லை, அனைத்து சட்ட விதிகளின்படி ஆளுநர் மாளிகை வெளிப்படுத்தன்மையாக உள்ளது. தற்போது விமர்சனம் செய்பவர்கள் கடந்த காலத்தில் எந்த அளவிற்கு பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.


சந்திர பிரியங்கா சாதியையும், பாலினத்தையும் குறிப்படுவது தவறு. அதுபோல கருத்து சொல்லியிருக்கக் கூடாது. பிரியங்காவுக்கு பக்க பலமாக அரசு இருந்தது. பெண் முன்னுக்கு வருவது சிரமம். போராடி தக்க வைத்து கொள்ள வேண்டும். சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன். ஆனால் அவர் தனது அட்மின் வைத்து ஆளுநர் பொய் சொல்வதாக கூறுவதை உடன்படமாட்டேன். நான் விமர்சனத்தை தாண்டி வந்தேன். சட்டவிதிகளின்படி நடந்து கொள்கிறேன்.


பல உண்மைகள் வெளிவரும்போது தெரியும். சந்திர பிரியங்காவுக்கு முக்கியத் துறைகளை தந்துள்ளோம். ஒதுக்கப்பட்டிருந்தால் தந்து இருப்பார்களா? தமிழகத்தில் இதுபோல் துறைகளை ஒதுக்கியுள்ளார்களா? இதைபற்றி தெரியாமல் கனிமொழி பேசுகிறார். சந்திர பிரியாங்கா வெளியிட்ட 9 பக்க சாதனைகள், அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது. நீங்களாக இவ்விஷயத்தில் கதை எழுதாதீர்கள். தனது அமைச்சரவையில் உள்ளோரை நீக்கவும், சேர்க்கவும் அமைச்சர்கள் பணியை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் முதல்வருக்கு உரிமை உண்டு. மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.