திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுதொடர்பாக ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள அவரிடம், “சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது நீங்கள் வெளியேறியதும், முக்கிய தலைவர்களின் பெயரை குறிப்பிடாததும் சரியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2022 ஆம் ஆண்டு சட்டபேரவையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு,  தேசிய கீதம் இசைக்க மாட்டோம் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.


மேலும் ஆளுநர் வரும்போதும், புறப்படும் போதும் தமிழ் தாய் வாழ்த்து, தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் பேசுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்காமல் புறப்படும் நேரத்தில் இசைத்தனர். இந்தமுறை சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோது, முறைப்படி, மீண்டும் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றம்,  அனைத்து மாநில சட்டசபைகளிலும் தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. அவரிடம் வாய்மொழியாகக் கேட்டதோடு மட்டுமல்லாமல் நானும் ஒரு கடிதம் அனுப்புகிறேன் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி அவருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் தேசிய கீதம் இசைக்கவில்லை.


அதேசமயம் அரசு முன்வைக்கும் உரையை பொறுத்தவரை, அது அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில், அது கொள்கைகளாகவோ, திட்டங்களோவோ இல்லாமல் பிரச்சாரம் செய்வது போல இருந்தது. இது தவறானது. மேலும் பொய்யாக இருந்தது. சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழகம் 'அமைதியின் பூங்கா' என்றார்கள்.நான் சில விஷயங்களை மேற்கோள் காட்டினேன். 


திராவிட மாடல் 


அவர்கள் நான் திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினர். முதலாவதாக, அத்தகைய மாதிரி ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும் தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.  'ஒரே பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம்.


தேசிய சுதந்திர போராட்டத்தை சுட்டிக் காட்டும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராளிகள், தங்கள் உயிரையும் எல்லாவற்றையும் கொடுத்த வரலாறு மற்றும் நினைவிலிருந்து எப்படி அழிக்க முற்படுகிறது?.  மாறாக மொழி, இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை அது மகிமைப்படுத்துகிறது.


சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சூழல் அமைப்பை உருவாக்கிய ஒரு கருத்தியல் ஆகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். 


முன்னதாக நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் ரவி  தனது உரையின்போது, அறிக்கையில் இடம் பெற்றிருந்த “திராவிட மாடல் அரசு” என்ற வார்த்தையை தவிர்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.