சாதாரண சட்டத்துக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை; சூதாட்டம், நுழைவுத்தேர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படும் உயிர்ப் பலிகளைத் தடுக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் தராமல் தடுக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.


மேலும், எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் (2024) வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் (india union muslim league) பவள விழா மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 




தி.மு.க. - இஸ்லாமிய மக்கள் நல்லுறவு 


திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.மலையாளத்திலும் வணக்கம் சொன்னார். டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டிற்கும் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதில் நிச்சயம் பங்கேற் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


கருணாநிதியும் இஸ்லாமும்


தந்தை பெரியாரின் குடியரசு இதழைப் போலவே,  தாருள் இஸ்லாம் என்ற இதழுக்கும் கருணாநிதி தன்னை செதுக்கியதில்  பங்கு உண்டு நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்பட தாவுத் ஷா-விற்கும் பங்கு உண்டு என்று கருணாநிதி கூறியிருப்பதை முதலமைச்சர் குறிப்பிட்டு பேசினார். 


இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, 1948 மார்ச், 10 அன்று காயிதே மில்லத் தலைவராக கொண்டு தொடங்கப்பட்டு 75-வது ஆண்டு பவள விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு சிறுபான்மை அமைப்பாக மட்டும் இல்லாமல் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கும் நீதி கிடைத்திட செயலாற்றி வருவது பாரட்டிற்குரியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 


இன்னும் சொன்னால் அறிஞர் அண்ணா கருணாநிதி இருவரும் இணைய பாலமாக இருந்தது  இஸ்லாம் எனலாம். கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டில் மிலாடி நபி நாளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.


கருணாநிதியின் பள்ளி கால நண்பர் ஹசன் அப்துல் காதர். முரசொலியை அச்சில் வருவதை சாத்தியமாக்கியது  கருணை ஜமாத்; உள்ளூரில் கட்டுரைகள் எழுதியவரை சேலம் மார்டன் தியேட்டரில் வசனம் எழுத காரணமாக இருந்தது கவிஞர் காமு ஷெரிஃப்.; கல்லிக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடியவர் நாகூர் ஹனிஃபா - இப்படி கருணாநிதி - திமுக- இஸ்லாம் இடையே நீடிக்கும் நல்லுறவை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 


இயக்கம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் ஒன்றிணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.