கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணி மற்றும் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்

 

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாக கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

டி.எஸ்.பி.விஷ்ணுப்ப்ரியா தற்கொலை

 


டி.எஸ்.பி.விஷ்ணுப்ப்ரியா


 

சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30 ஆம் தேதி விசாரணையும் ஆரம்பமாகியது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி.

 

பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி

 

சுவாதியும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி, திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.

 

மாற்றப்பட்ட அரசு வழக்கறிஞர் 

 

அரசு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என மனம் வெதும்பிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார்.

 


வழக்கறிஞர் ப.பா.மோகன்


 

அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தர விட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

 

வழக்கின் போக்கை மாற்றிய சிசிடிவி காட்சி

 

2019 ஆம் ஆண்டு மே 05-ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திடீர் திருப்பமாக அரசு தரப்புக்கு வலுவான சாட்சிகள் கிடைத்துள்ளன. வழக்கின் தற்போதைய நிலை குறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்ட போது, "தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகள் இவற்றை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும். ஆனால் போலீசோ, திருச்செங்கோடு மலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அரசு தரப்பு கவனிக்காமல் விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது என முதலில் சொன்ன மதன்குமார், கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடந்த விசாரணையில் உண்மையைச் சொல்லிவிட்டார். அதுவும் கோவில் உதவி ஆணையர் சூரிய நாராயணனின் சாட்சியத்திற்குப் பிறகு. இதனை இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக மாறியது.

 

யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு 

 

 


யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர்


 

கைது செய்யப்பட்ட 17 பேரில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேரை விடுதலை செய்து மாவட்ட நீதிபதி சம்பத் குமார் உத்தரவு 2015 நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தலை துண்டிக்கப்பட்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டு 116 சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யுவராஜ் உட்பட 10 பேருக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.