செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுனத்தின் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கான தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ஸ் (Godrej Consumer Products) நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.516 கோடி ரூபாய் முதலிட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான தமிழக அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேற்கொள்ளப்பட்டது.


இதன் மூலம் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு, தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.


2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட ஒரு வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு


ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியிலிருந்து புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ( 2024-ஆம் ஆண்டு) ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வரவுள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு கிரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக நிறுவனம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கோத்ரேஜ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது