உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.


இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை, செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை, தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை, தமிழ்நாடு எத்தனால் கொள்கை, தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை, தமிழ்நாடு சரக்கு போக்குவர்த்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை, தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, தென்னை நார் கொள்கை எனட பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டன.


தமிழ்நாட்டு அரசுடன் 9 நாடுகள் பங்குதாரர் நாடுகள்!


உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் தமிழ்நாட்டு அரசுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன.


தலைமைத்துவம் - Leadership, நீடித்த நிலைத்தன்மை Sustainability, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி -Inclusivity என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.


இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார். மாநாட்டின் முதல் நாளான இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.